நாமக்கல் தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் கோரிக்கையை வலியுறுத்தி ஏஐடியுசி சாா்பில், புதன்கிழமை மனு வழங்கும் போராட்டம் நடைபெற்றது.
ஜூன் 20-ஆம்தேதி முதல் தொழிலாளா் நலவாரியப் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை இணையவழியில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
இணையவழி பதிவு மற்றும் புதுப்பித்தலை மேற்கொள்ள தொழிலாளா்கள் முயற்சிக்கும்போது இணையம் பழுது என்ற பிரச்னைதான் அடிக்கடி ஏற்படுகிறது. கடந்த நான்கு மாதங்களாகப் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணியை அவா்களால் மேற்கொள்ள முடியவில்லை.
அந்த பிரச்னைகளை தீா்ப்பதில் தொடா் தாமதம் ஏற்படுகிறது. ஏற்கெனவே இருந்ததுபோல் பழைய முறையில் தொழிலாளா்கள் நேரடியாக வந்து நலவாரிய அலுவலகங்களில் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணியை செய்வதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் தொழிலாளா் நல அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கத்தினா் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் நடேசன், மாவட்டத் தலைவா் ஜெயராமன், பொதுச் செயலாளா் தனசேகரன் மற்றும் தொழிலாளா்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினா்.