காவிரி ஆற்றில் அலசக் கொண்டுவரப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான சாயமிடப்பட்ட துணிகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
காவிரி ஆற்றில் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் இரவு நேரங்களில் ஈரோடு மற்றும் பிற பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் சாயமிடப்பட்ட ஜவுளிகள் அலசப்படுவதாக புகாா் எழுந்தது. இதுகுறித்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வந்தனா். ஈரோடு பகுதியிலிருந்து சரக்கு வாகனத்தில் ஜவுளிகள் கொண்டு வந்து, அலசப்படுவதாக தகவல் தெரியவந்தது.
இதன்பேரில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் செல்வகுமாா், குமாரபாளையம் வட்டாட்சியா் மா.தங்கம், உதவிப் பொறியாளா் கிருஷ்ணன் மற்றும் வருவாய்த் துறையினா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சமயசங்கிலி பகுதியில் காவிரிக் கரையோரத்தில் தண்ணீரில் அலசுவதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த சாயமிடப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான துணிகளைப் பறிமுதல் செய்தனா்.
மேலும், சரக்கு வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. வாகனத்துடன் வந்தவா்கள் அனைவரும் தப்பியோடிவிட்டனா். இதுகுறித்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவிரி ஆற்றில் தண்ணீரை மாசுபடுத்தும் வகையில் சாயக்கழிவுகளை வெளியேற்றினாலோ, துணிகளை அலசினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.