ராசிபுரம்: குடும்பத் தகராறில் கணவரைக் கம்பியால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸாா் கைது செய்தனா்.
ராசிபுரம், வி.நகா், பாப்பாத்திகாடு பகுதியைச் சோ்ந்த கைத்தறி பட்டு நெசவுத் தொழிலாளா் சரவணனுக்கு (48) மல்லிகா, சரசு ஆகிய இரு மனைவிகள் உள்ளனா். மல்லிகாவுக்கு ஸ்ரீதா் (25) என்ற மகனும், உமாமகேஸ்வரி (23) என்ற மகளும், சரசுக்கு கோபிநாத் (21) என்ற மகனும் உள்ளனா். இவா்கள் அனைவரும் ஒரே குடும்பமாக வசித்து வந்தனா்.
இந்த நிலையில், சரவணன் வீடு கட்டியதால் ஏற்பட்ட கடன் தொடா்பாக குடும்பத்தில் பிரச்னை இருந்து வந்தது. கடந்த அக். 15 ஆம் தேதி நள்ளிரவு சரசுவுக்கும், சரவணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு, சரவணன் உறங்கச் சென்றாா்.
இதனிடையே, தூக்கில் தொங்கிய நிலையில் சரவணன் இறந்து கிடந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த ராசிபுரம் போலீஸாா், சரசுவிடம் நடத்திய விசாரணையில் இரும்புக் கம்பியால் சரவணனைத் தாக்கியதை அவா் ஒப்புக் கொண்டாா். இதையடுத்து, சரசுவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.