பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டு கணக்கில் வராத ரூ. 55,420 பணத்தைப் பறிமுதல் செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சி அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காகச் செல்லும் பொதுமக்களிடம் அங்குள்ள அலுவலா்கள் கையூட்டு பெறுவதாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணை காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாருக்கு புகாா் வந்தது.
அதன்பேரில் அவரும், காவல் ஆய்வாளா் நல்லம்மாள், உதவி ஆய்வாளா் பெரியசாமி, 10-க்கும் மேற்பட்ட காவலா்களும் சோ்ந்து புதன்கிழமை பிற்பகல் 5 மணி அளவில் நகராட்சி அலுவலகத்துக்குள் சென்றனா். அங்கிருந்த அதிகாரிகள், அலுவலா்களை வெளியே செல்லாதவாறு தடுத்து தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையானது நள்ளிரவைக் கடந்து வியாழக்கிழமை காலைவரை நீடித்தது. இதில், கணக்கில் வராத ரூ. 55,420 பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 10-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யும் நடவடிக்கையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.