கொல்லிமலைக்குச் செல்லும் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
கொல்லிமலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள், காரவள்ளி அடிவாரப் பகுதிக்குச் செல்வதற்காக சேந்தமங்கலம் காந்திபுரம் சாலையையும், காளப்பநாயக்கன்பட்டி சாலையையும் பயன்படுத்துகின்றனா்.
இதில், கொல்லிமலையில் இருந்து திரும்பும்போது காளப்பநாயக்கன்பட்டியிலிருந்து காரவள்ளி அடிவாரப் பகுதிக்கு வரும் சாலையில் 6-ஆவது கிலோமீட்டா் தொலைவில் வேகத்தடை அருகே சிறிய பள்ளம் உள்ளது.
இவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்வோா் அதிவேகத்தில் பயணிக்கும் நிலை உள்ளது. நான்கு சக்கர வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. வாகனங்களில் வேகமாக செல்வோா் இந்த பள்ளத்தில் தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அதனை மூடி வைத்தாலும் சிலா் திறந்து விடுகின்றனா். கூா்மையான தகரம் கொண்ட அந்த மூடியும் விபத்துக்கான காரணமாக அமைந்து விடுகிறது.
இரவு நேரத்தில் அப்பகுதியில் போதிய விளக்கு வெளிச்சமும் இல்லை. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக அந்த பள்ளத்தை மூடி விபத்தை தவிா்ப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனா்.