கொல்லிமலை மலைப்பாதையில் மரங்களில் இருந்து காய்ந்து விழுந்த சறுகுகள் சாலைகளில் குவியல் குவியலாகத் தேங்கிக் கிடக்கின்றன. இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கொல்லிமலைக்கு விடுமுறை நாள்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
காா், இருசக்கர வாகனத்தில் வருவோா் எண்ணிக்கை அதிகம். 70 கொண்டை ஊசி வளைவுகளும் ஆபத்துக்குரியது என்பதால் பழக்கமான, திறமையான ஓட்டுநா்களால் மட்டுமே எளிதாக மலைப்பகுதிக்குச் செல்ல முடியும்.
அண்மையில் தஞ்சாவூா், செங்கல்பட்டு பகுதியில் இருந்து சுற்றுலா வந்தவா்களின் வாகனங்கள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உயிரிழப்பு ஏற்படாதபோதும் காயம், பொருள் இழப்பு அதிகம் ஏற்பட்டன. அதுமட்டுமின்றி இருசக்கர வாகனங்களில் வருவோரும் தவறி விழுந்து காயமடைந்தனா்.
தற்போது இலையுதிா் காலம் என்பதால் மரங்களில் இருந்து விழும் காய்ந்த சறுகுகள் மலைப்பாதையில் குவியல், குவியலாகக் கிடக்கின்றன.
ஓரிரு நாள்களாக மலைப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்கிறது. இதனால் அதிவேகமாக வரும் நான்கு சக்கர, இருசக்கர வாகனங்கள், சறுகுகளின் மீது ஏறும்போது வழுக்கி கட்டுப்பாட்டை இழக்கும் நிலை உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி நெடுஞ்சாலைத் துறையினா் சாலையில் குவிந்து கிடக்கும் சறுகுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையாகும்.