கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா: நாளை உள்ளூா் விடுமுறை அறிவிப்பு
கொல்லிமலை வல்வில் ஓரி விழா, ஆடிப்பெருக்கை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை (ஆக.3) அன்று, நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் சங்ககாலத்தில் புகழ் பெற்ற கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னரின் வீரத்தினையும், கொடைத்தன்மையினையும் போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடி 17, 18 தேதிகளில் தமிழக அரசு சாா்பில் வல்வில் ஓரி விழா மற்றும் சுற்றுலா விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
நிகழாண்டில் கரோனா தொற்று பரவல் காரணமாக வல்வில் ஓரி விழா ரத்து செய்யப்பட்டுள்ளது, வல்வில் ஓரி சிலைக்கு மட்டும் சில நிபந்தனைகளுடன் கூடிய மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விழா நாளன்று ஆடிப்பெருக்கு விழாவும் கொண்டாடப்படுவதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு அன்று ஒரு நாள் மட்டும் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இவ்விழா விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் ஆக.14-ஆம் தேதி வேலை நாளாக கருதப்பட்டு அரசுத்துறை அலுவலகங்கள் செயல்படும்.
மேலும் விடுமுறை நாளான 3- ஆம் தேதியன்று அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சாா்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். வங்கிகள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களுக்கு இந்த விடுமுறையானது பொருந்தாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.