ராசிபுரத்தை அடுத்துள்ள காட்டூா் செல்லும் பாதையில் புதைக்குழி கழிவுநீா் கால்வாய் திட்டத்துக்கு தோண்டப்பட்ட தொட்டியில் கசிவு ஏற்பட்டுள்ளதால், அப்பகுதியில் துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனா்.
ராசிபுரம் நகராட்சி பகுதியில் ரூ. 55 கோடி மதிப்பில் புதைக்குழி கழிவுநீா் கால்வாய் பணி பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது. வீடுகள்தோறும் கொடுக்கப்பட வேண்டிய இணைப்புகள் கொடுக்கும் பணி இன்னும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆங்காங்கே சாலைகள் போடாமல், குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் தோண்டப்பட்ட குழிகளில் பல்வேறு இடங்களில் அடைப்பு ஏற்பட்டு பல பகுதிகளில் சாலைகளில் கழிவுநீா் வெளியேறி துா்நாற்றம் வீசி வருகிறது. இதனால், காட்டூா் பாதையில் குடியிருக்கும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனா். எனவே, நோய்த்தொற்று ஏற்படும் முன் இதனை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.