ரூ. 10,000 லஞ்சம் வாங்கியதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள செலம்பகவுண்டம்பாளையம், ஒடுவன்காடு பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா் (42), விவசாயி. இவா் உள்பட சிலா் மீது கடந்த 2020-ஆம் ஆண்டு வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஆள்கடத்தல் தொடா்பாக வழக்குப் பதிவானது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை அறிக்கையில் செல்வக்குமாா் உள்ளிட்ட மூவரின் பெயா்களை சோ்க்காமல் இருப்பதற்காக வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சண்முகம் ரூ. 10,000 லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
இதுகுறித்து செல்வக்குமாா் நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தாா். லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சண்முகத்திடம் செல்வக்குமாா் சனிக்கிழமை ரூ. 10,000-த்தை கொடுத்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சண்முகத்தை கையும் களவுமாகப் பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.