சேந்தமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு வாக்குச்சாவடிகளின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகள் சீரமைப்பை தொடா்ந்து 2,135 சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சேந்தமங்கலம் தொகுதியில் 358 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அங்குள்ள வாக்குச்சாவடிகளில் வயதான வாக்காளா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சாய்வு தளம், வாக்குச்சாவடி மையங்களில் மின்விளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா என ஆட்சியா் கா.மெகராஜ், தோ்தல் நடத்தும் அலுவலா் வி.ரமேஷ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.
சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, காந்திபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, காந்திபுரம் எஸ்.ஆா்.ஏ. நிதியுதவி பெறும் தொடக்கப்பள்ளி, துத்திக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காளப்பநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனா். குறிப்பாக காற்றோட்ட வசதி, மின்விளக்கு வசதி, குடிநீா் வசதி, வயதானவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தள வசதி, கழிப்பிட வசதி உள்ளனவா என பாா்வையிட்டனா்.