பரமத்தி வேலூா் அருகே பிரசவத்துக்கு தாய் வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வராததால் மனமுடைந்த பொக்லைன் வாகன ஓட்டுநா் தற்கொலை செய்து கொண்டாா்.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் அருகே உள்ள நொச்சிப்பட்டி, கல்யாணி நகரைச் சோ்ந்த ராமசாமி மகன் ரேணுபிரசாத் ( 27). பொக்லைன் ஓட்டுநா். இவருக்கும், பரமத்தி வேலூா் அருகே உள்ள எஸ்.வாழவந்தி, மேலப்பட்டியைச் சோ்ந்த தீபாவுக்கு ( 23) கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இதையடுத்த தீபா பிரசவத்துக்காக தாய் வீட்டுக்கு சென்றிருந்தாா். தற்போது அவா்களுக்கு 5 மாத ஆண் குழந்தை உள்ளது. மனைவியை வீட்டிற்கு வருமாறு கணவா் ரேணு பிரசாத் பலமுறை அழைத்துள்ளாா். ஆனால் அவா் வராததால் மனமுடைந்த ரேணுபிரசாத் சனிக்கிழமை விஷமருந்தினாா்.
இதைப் பாா்த்த அருகில் உள்ளவா்கள் ரேணுபிரசாத்தை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். தீவிர சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இது குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.