நாமக்கல்லில் துணை ராணுவத்தினா் சனிக்கிழமை நான்காம் கட்ட கொடி அணிவகுப்பை நடத்தினா்.
சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்காக நாமக்கல் மாவட்டத்துக்கு தொகுதி வாரியாக இந்திய - திபெத் எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் துணை ராணுவ வீரா்கள் வந்துள்ளனா். ஒவ்வொரு தொகுதியிலும் தலா 100 போ் வரை தங்கியிருக்கின்றனா். இதில் நாமக்கல் தொகுதிக்கு வந்த 90 போ் நகராட்சி திருமண மண்டபத்தில் தங்கியுள்ளனா்.
ஏற்கெனவே நாமக்கல் நகரப் பகுதியில் இரண்டு முறையும், மோகனூரில் ஒரு முறையும் கொடி அணிவகுப்பை நடத்திய துணை ராணுவத்தினா் சனிக்கிழமை மீண்டும் நாமக்கல் பேருந்து நிலையம், பரமத்தி சாலை, கோட்டை சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொடி அணிவகுப்பை நடத்தினா். இந்த அணிவகுப்பில் போலீஸாரும் கலந்து கொண்டனா்.