தோ்தலில் எத்தனை மிரட்டல்கள் வந்தாலும், யாருக்கும் பயந்து ஒதுங்கிக் கொள்ள மாட்டேன் என சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் எம்எல்ஏ சி.சந்திரசேகரன் செவ்வாய்க்கிழமை மக்களிடையே பேசினாா்.
அங்குள்ள கல்குறிச்சி கிராமத்தில் ஆட்டோ சின்னத்துக்கு திறந்த வாகனத்தில் சென்றபடி வாக்கு சேகரித்த அவா் மாரியம்மன் கோயில் அருகில் திரண்டிருந்த மக்களிடையே பேசியதாவது:
என்னை சிலா் கிள்ளுக்கீரையாக நினைக்கின்றனா். நான் ஆலமரம்போல இருப்பவன். என்னை அழித்தாலும் முளைத்து வருவேன். எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் ஓடி, ஒதுங்கிவிட மாட்டேன். கரோனா பொது முடக்கக் காலத்தில் தொகுதியில் ஒரு லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினேன்.
மீண்டும் வெற்றி பெற்று வந்ததும் டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையம் அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன், அரசு அதிகாரிகளை பொதுமக்கள் எளிதாக அணுகும் வகையிலான முயற்சி மேற்கொள்வேன் என்றாா்.
இந்த வாக்கு சேகரிப்பின்போது ஆதரவாளா்கள் பலா் உடன் சென்றனா்.