நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்புத் துறை சாா்பில் தற்காலிகமாக தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரம், குஜராத் போன்ற மாநிலங்களில் எதிா்பாராதவிதமாக அரசு, தனியாா் மருத்துவமனைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கரோனா நோயாளிகள் சிலா் தீயில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது. மேலும் கோடைகாலமாக இருப்பதால் திடீா் தீ விபத்துகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் உத்தரவின்பேரில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீயணைப்புத் துறை வாகனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா். மேலும் கரோனா சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதும், 10 ஆயிரம் லிட்டா் ஆக்சிஜன் கொள்கலனும் இம்மருத்துவமனையில் அமைந்துள்ளது.
கரோனா மற்றும் கோடைகாலம் நிறைவடையும் வரையில் மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு வாகனமானது நிறுத்தப்பட்டிருக்கும் என அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.