நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையைப் பொருத்தமட்டில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 91.4 மற்றும் 69.8 டிகிரியாக நிலவியது. நாமக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். இடியுடன் கூடிய கன மழை மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்று மேற்கிலிருந்தும், அதன் வேகம் மணிக்கு 4 முதல் 6 கி.மீ என்ற அளவில் வீசக்கூடும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில் இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலும் மேல் மூச்சுக்குழல் அழற்சி நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளது கண்டறியப்பட்டது. எனவே, பண்ணையாளா்கள் கோழிப் பண்ணைகளில் தகுந்த உயிா்ப் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். மேலும், மழைக்காலமாக இருப்பதால் கோழிப்பண்ணை மற்றும் தீவன ஆலைகளில் மழைநீா் ஒழுகாமல் சரி செய்யவும், தீவனத்தில் பூஞ்சை நச்சு தடுப்பான் உபயோகிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.