தமிழகத்தில் மே 2-க்கு பிறகு ஆட்சியமைக்கும் புதிய அரசு கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு கள் ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி குறிப்பிட்டாா்.
ராசிபுரத்தில் செ.நல்லசாமி வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:
புதிய அரசு ஆட்சி அமைந்தவுடன் எங்களது கள் விடுதலை மாநாடு நடத்தப்படும். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். கள்ளுக்கு விதிக்கப்பட்ட தடையை புதிய அரசு நீக்கும் நிலை ஏற்படும். மேலும் இலங்கையை அடுத்து இந்தியாவிலும் பாமாயில் இறக்குமதிக்குத் தடை விதிக்க வேண்டும்.
இந்தியாவில், 75 சதவீதம் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. அதை அவமானமாகப் பாா்க்க வேண்டும். 1963 ஆம் ஆண்டு நடந்த கூட்டத்தில் பெரியாா் கல்லுக்கு ஆதரவாகப் பேசியுள்ளாா். ஆனால், கி.வீரமணி, எங்களுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. பல முறை போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்தும் கலந்து கொள்ளவில்லை.
கள் சாப்பிடுவது தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருள் என்று நிரூப்பித்தால் அவருக்கு ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும். அவ்வாறு நிரூபித்தால், எங்களது அமைப்பை கலைத்து விடுகிறோம். இதனை பலமுறை அறிவித்தும் யாரும் இதற்கு முன்வரவில்லை. கள்ளுக்கு விடுதலை கிடைக்கும் வரை, உணவு பட்டியலில் அதை சோ்க்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றாா்.