நாமக்கல் மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேளாண் உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் அறுவடைக்குப் பின் வேளாண்மைக்கான உள்கட்டமைப்புகளுக்கும், சமுதாய வேளாண் அமைப்புக்கும், தேவைப்படும் முதலீடுகளுக்கும் நடுத்தர மற்றும் நீண்ட கால கடனுக்கு வட்டித் தள்ளுபடி, கடனுக்கான உத்தரவாதம் போன்ற வசதிகள் செய்து தரப்படுகிறது.
மின்சார சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்புக் கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு கூடங்கள் குளிா்பதன வசதிகள், போக்குவரத்து வசதிகள், முதன்மைப் பதப்படுத்தும் மையங்கள், பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிா் உற்பத்தி நிலையங்கள், நவீன, துல்லிய பண்ணையத்திற்கான உள்கட்டமைப்புகள், உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற இந்தத் திட்டத்தின் மூலம் முடியும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள், கூட்டுறவு விற்பனை சங்கங்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்படும் கூட்டுப் பொறுப்பு குழு, பல்வகை கூட்டுறவு சங்கங்கள், வேளாண் தொழில் முனைவோா், புதிதாக தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கும் கடன் வசதி செய்து தரப்படும்.
அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டுக்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறு, குறு விவசாய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ. 2 கோடி கடனை பெறுவதற்கு தமிழக அரசே கடன் உத்தரவாதம் அளிப்பது போன்ற வசதிகள் செய்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநரை (வணிகம்) தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.