நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில், 1,000 லி. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி விரைவில் பொருத்தப்பட உள்ளது.
நாமக்கல் அரசு மருத்துவமனையில் வெளியில் இருந்து ஆக்சிஜனை லாரிகளில் கொண்டு வந்து அங்கு நிறுவப்பட்டுள்ள கொள்கலனில் நிரப்பி அவற்றை சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு வழங்குவதற்கான கருவி செயல்பாட்டில் உள்ளது. புதிய ஆக்சிஜன் உற்பத்தி கருவி அமைக்கப்படும் பட்சத்தில் வெளியில் இருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டிய தேவையில்லை.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவமனை கட்டுமானப் பணி இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவு பெற்று விடும். அங்கு, பிரதமா் நிதியுதவி திட்டத்தின் கீழ் 1,000 லி. கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கருவி பொருத்தப்பட உள்ளது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமை (டி.ஆா்.டி.ஓ) உதவியுடன், தமிழக அரசு இக்கருவியை பொருத்துவதற்கான பணியை மேற்கொண்டுள்ளது. அண்மையில், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2,000 லி. கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கருவி பொருத்தப்பட்டது. இதன் மூலம் 100 நோயாளிகளுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும்.
இன்னும் ஓரிரு நாள்களில், 1,000 லி. கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி கருவி நாமக்கல் அரசு மருத்துவமனை புதிய கட்டடத்துக்கு கொண்டு வரப்பட உள்ளது. அதன்பின் இடம் தோ்வு செய்யப்பட்டு அதனை பொருத்தும் பணிகள் நடைபெறும் என அரசு மருத்துவமனை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.