சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி மக்கள் மனம் குளிரும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
பரமத்திவேலூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கபிலா்மலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
நாட்டில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வியில் சிறந்த மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம், அனிச்சம்பாளையத்தில் இருந்து கரூா் மாவட்டம், புகளூரை இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ. 406 கோடி மதிப்பீட்டில் கதவணை கட்டப்படவுள்ளது. விவசாயிகளின் கோரிக்களை ஏற்று கூட்டுறவுச் சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையான மும்முனை மின்சாரம் வழங்கும் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தோ்தலையொட்டி மக்கள் மனம் குளிரும் வகையில் அறிவிப்புகள் வெளிவரும் என்றாா்.
மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூகநலம்- சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.