நாமக்கல் மாவட்டத்தில் 5.20 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டும் ரூ. 2500 ரொக்கப் பணம் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
பொங்கல் பண்டிகையையொட்டி அரிசிவாங்கும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2,500 ரொக்கப்பணத்துடன், முந்திரி, ஏலக்காய், உலர்திராட்சை, முழு கரும்பு, ஒரு கிலோஅரிசி, ஒரு கிலோ சர்க்கரை விநியோகிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதனையொட்டி நியாயவிலைக் கடைபணியாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்றுடோக்கன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை தொடங்கிய இந்த பரிசு தொகுப்பானது ஜன.12–ஆம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் என நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் வழங்கப்பட உள்ளது. விடுபட்டவர்கள் ஜன.13–ஆம்தேதியன்று சம்மந்தப்பட்ட நியாய விலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 900 நியாயவிலைக் கடைகள்மூலம் 5 லட்சத்து 20 ஆயிரத்து 200 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதனையொட்டி அந்தந்த நியாயவிலைக் கடைகளில் பரிசுதொகுப்பினை பொட்டலமிடும் பணி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இரவு வரை தொடர்ச்சியாக நடைபெற்றது.
மேலும் ரொக்கப் பணம் கூட்டுறவுவங்கிகளில் இருந்து மொத்தமாக சம்மந்தப்பட்ட விற்பனையாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. குமாரபாளையத்தில் மின்சாரத் துறை அமைச்சர் பி தங்கமணி, ராசிபுரத்தில் சமூக நலத்துறை அமைச்சர் வெ.சரோஜா, நாமக்கல்லில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர், சேந்தமங்கலத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் சி. சந்திரசேகரன் ஆகியோர் தங்களுடைய தொகுதிக்குட்பட்ட நியாய விலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினர். பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அவற்றை பெற்றுச் சென்றனர்.