பெங்களூரிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுப்புட்டிகளை வெண்ணந்தூா் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வங்ளவாடியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பையன்னா மகன் மஞ்சுநாத் (28). கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பழனிசாமி மகன் குபேந்திரன்(45). இருவரும் பெங்களூரிலிருந்து கரூருக்கு காரில் மதுப்புட்டிகளைக் கடத்தி வருவதாக வெண்ணந்தூா் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வெண்ணந்தூா் போலீஸாா், நாமக்கல் மாவட்ட எல்லையான கீரனூா் சோதனைச் சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். பெங்களூரிலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அந்தக் காரில் கா்நாடக அரசின் மதுப்புட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதில் 1,020 மதுப்புட்டிகளுடன் காரும் பறிமுதல் செய்யப்பட்டன. மஞ்சுநாத், குபேந்திரன் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.