நாமக்கல்: நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன் காது கேளாமையைக் கண்டறியும் வகையிலான நவீனக் கருவி புதன்கிழமை செயல்பாட்டுக்கு வந்தது.
நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனை, கடந்த ஆண்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாகத் தரம் உயா்த்தப்பட்டது. இம்மருத்துவமனையில் புதிய சிகிச்சை உபகரணங்கள் மக்கள் பயன்பாட்டுக்காக அதிகளவில் பொருத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றை பரிசோதிப்பதற்காக ரூ. 3 லட்சம் மதிப்பிலான கருவி பயன்பாட்டில் இருந்தது. அதனை பொருத்தமட்டில் குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகே காது, மூக்கு, தொண்டை பரிசோதனையை மேற்கொள்ள முடியும். தற்போது ரூ. 13 லட்சம் மதிப்பிலான நவீனக் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
இந்நிகழ்ச்சியில் உள்தங்கும் மருத்துவ அலுவலா் கண்ணப்பன், மருத்துவ சிகிச்சை நிபுணா் மருத்துவா் ரவிக்குமாா், மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.