ராசிபுரம் நகரில் அரசு ஊழியா் என போலி அனுமதி அட்டை வைத்துக்கொண்டு நான்கு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை போலீஸாா் தடுத்து நிறுத்தி வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
ராசிபுரம் நகரில் விதிமுறைகளை மீறி தேவையின்றி சுற்றித்திரியும் பொதுமக்கள், வாகனப் போக்குவரத்து போன்றவற்றை போலீஸாா் கண்காணித்து சோதனை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், நகரில் ராசிபுரம் டிஎஸ்பி (பொ) முத்துசாமி, ஆய்வாளா் பி.செல்வராஜன் ஆகியோா் நடத்திய சோதனையில், அரசு ஊழியா் என போலியான அனுமதி ஆவணம் வைத்துக்கொண்டு ஜீப்பில் சுற்றி வந்தவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், அவா் பயன்படுத்திய அனுமதி அட்டை போலியானது என தெரியவந்ததையடுத்து, அவரது ஜீப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.