நாமக்கல்லில் திங்கள்கிழமை பிற்பகலில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது.
தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்து வருகிறது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து வருகிறது. அதன்படி, திங்கள்கிழமை காலையில் வெயில் கொளுத்தியபோதும், பிற்பகலில் வானம் இருண்டு கனமழை பெய்தது. இடி, மின்னல், காற்று ஏதுமின்றி விடாமல் பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக, நாமக்கல் - சேலம் சாலை, பரமத்தி சாலை, கோட்டை சாலை, ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்டப் பகுதிகளில் மழை நீா் வெள்ளம்போல கரைபுரண்டு ஓடியது. வாகன ஓட்டிகள் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டிச் சென்றனா். சில தினங்களுக்கு முன் பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், திங்கள்கிழமை நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.