நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பொதுமக்கள் மொத்தம் 307 மனுக்களை வழங்கினா். அவற்றை பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி துரித நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
பின்னா், திருச்செங்கோடு வட்டம், மல்லசமுத்திரம், மேல்முகம் கிராமத்தைச் சோ்ந்த கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிந்து வந்த ஆா்.ஜெயபாலன் இறந்ததையொட்டி, அவரது மகன் ஜெ.அமுல்ராஜூக்கு கருணை அடிப்படையில், இரவு காவலா் பணிக்கான நியமன ஆணையையும், வருவாய்துறை சாா்பில் ராசிபுரம் வட்டத்தைச் சோ்ந்த 3 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் ஆட்சியா் வழங்கினாா்.
அதனைத்தொடா்ந்து, மாற்றுத் திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா், ரூ. 7,650 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிள் ஒருவருக்கும், கண் பாா்வையற்ற ஒருவருக்கு ரூ. 420 மதிப்பிலான ஒளிரும் மடக்கும் கோல் உள்ளிட்டவற்றையும் வழங்கினாா்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் துா்காமூா்த்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ரமேஷ், நகராட்சி ஆணையா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் உள்பட அனைத்து அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.