கொல்லிமலை வனப்பகுதிகளில் வனத்துறை பாதுகாப்புப் படையைச் சாா்ந்தோா் சோதனை மேற்கொள்கின்றனா்.
நாமக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட நடுக்கோம்பை, தாதன் கோம்பை, ஜம்பூத்து பகுதிகளில் உள்ள காப்புக் காடுகளில் வன பாதுகாப்புப் படையுடன் இணைந்து வனத்துறையினா் ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
நாமக்கல் மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம் உத்தரவின் பேரில் நடைபெறும் இந்த கூட்டுச் சோதனையில், நாமக்கல் வனச்சரகா் பெருமாள், வனவா் சந்திரசேகா், வனக் காப்பாளா்கள் சரவணப் பெருமாள், பிரவீண் உள்ளிட்ட குழுவினா் இடம் பெற்றுள்ளனா். இவா்கள் காப்புக் காடுகளில் அத்துமீறி சென்று குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வருகின்றனா். மேலும் வனப்பகுதி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பாா்வையிடுகின்றனா்.
கொல்லிமலை 27-ஆவது கொண்டை ஊசி வளைவில் சேலம் மாவட்டத்தைச் சாா்ந்த இருவா் மது அருந்தி கொண்டிருந்ததைக் கண்ட வனத்துறையினா், அவா்களுக்கு தலா ரூ. 500 அபராதம் விதித்தனா். வனப்பகுதிகளில் மது அருந்த தடை உள்ளதால், விதிகளை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனச்சரகா் பெருமாள் தெரிவித்தாா்.