மரங்கள், வேளாண் நிலம் உள்ளிட்டவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பிறகே, உயா் மின் கோபுரத் திட்டப் பணிகளைத் தொடங்கக் கோரி நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை விவசாயிகள் மனு அளித்தனா்.
உயா்மின் கோபுரத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூட்டு இயக்கத்தின் சாா்பில் அதன் ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமையில் அளிக்கப்பட்ட மனு விவரம்:
திருப்பூரில் இருந்து பொங்கலூா் வரையிலும், திருச்செங்கோடு முதல் குமாரபாளையம் வரை, மோகனூா், எருமப்பட்டி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 4 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கிலோ வாட் மின்சாரம் செல்வதற்காக உயா்மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் விவசாயிகளின் நிலங்களின் மதிப்பை குறைத்து இழப்பீட்டை வழங்கி வருகிறது. விவசாயிகள் தாங்கள் விரும்பும் வகையில் தங்களுடைய நிலங்களில் பயிரிட முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனா். இதில், தமிழக அரசு தரப்பில் எந்தவித வெளிப்படைத் தன்மையும் இல்லை. வேளாண் நிலம், மரங்கள் போன்றவற்றுக்கு இழப்பீடு வழங்கிய பிறகே திட்டப் பணிகளைத் தொடங்க வேண்டும்.
இழப்பீடாக வழங்கப்படும் தொகையை 20 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனா்.