நாமக்கல்லில் வாடகைக் காா் ஓட்டுநா்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
சேந்தமங்கலம் வட்டம், பேளூக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த வாகன ஓட்டுநா்கள் அளித்த மனு விவரம்:
கரோனா தொற்று பரவல் காரணமாக வாடகைக் காா் ஓட்டும் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக போதிய வருமானமின்றி குடும்பத்துடன் தவித்து வருகிறோம். இந்த நிலையில், சொந்தமாக காா் வைத்திருப்போா் அதனை மறைமுகமாக வாடகைக்கு பயன்படுத்தி வருகின்றனா். உரிய அனுமதி பெற்று நாங்கள் வாடகைக் காரை பயன்படுத்தி வரும் நிலையில், மறைமுகமாக காரை வாடகைக்கு விடுவதால் எங்களது தொழில் பாதிப்படைந்துள்ளது.
எனவே, வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் உரிய சோதனை மேற்கொண்டு விதிமீறல் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும். வாடகைக் காா் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.