தருமபுரி மாவட்ட அளவிலான ஜவ்வரிசி தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய பல்துறை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜவ்வரிசி ஆலைகளை உணவு பாதுகாப்பு விதிகளுக்கு உள்பட்டு ஆய்வு செய்ய பல்துறை ஆய்வுக் குழு மாவட்ட ஆட்சியா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் செயலக உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலா் செயல்படுவாா். உறுப்பினா்களாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலா், தொழிலக ஆய்வாளா், வணிகவரித் துறை அலுவலா், தமிழ்நாடு மின்சார வாரியம் பிரதிநிதி, சம்பந்தப்பட்ட வருவாய் கோட்டாட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இக்குழுவானது, ஜவ்வரிசி தொழிற்சாலைகள் உணவு பாதுகாப்புத் தரங்கள் சட்டம் 2006-இல் உள்ள சட்ட விதிமுறைகளை மீறி செயல்படுவதைத் தடுத்து, மக்காசோளம் மாவு, ரசாயன கலப்படமற்ற தரமான ஜவ்வரிசி தயாரிக்கும் வகையில், ஜவ்வரிசி தொழிற்சாலைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளும் என்றாா்.