நாமக்கல் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோயின் தாக்கம் உள்ளதால் பிப். 1 முதல் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளா்ப்பு இருந்து வருகிறது. கோழிவளா்ப்பு மூலம் தங்களது குடும்பத்திற்கான முட்டை, இறைச்சி தேவைகளை அடைவதோடு விற்பனை மூலம் பொருளாதார மேம்பாடும் அடைந்து வருகின்றனா்.
கோழி வளா்ப்பு ஊரகப்பகுதிகளில் உபயோகமற்ற தானிய மிகுதிகளிலும் நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாக நடைபெற்று வருகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அதனைக் கட்டுப்படுத்த வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கால்நடைப் பராமரிப்புத் துறை மூலமாக ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கோழி நோய் தடுப்பூசி இருவார முகாம் நடத்தப்படுகிறது. நிகழாண்டில் பிப். 1 முதல் 14-ஆம் தேதி வரை இரண்டு வாரங்கள் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தும் பணி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
இம்முகாம் நடைபெறும் தேதியை தங்களது அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.