பரமத்தி வேலூா் அருகே உள்ள பரமத்தி வட்டாரத்திற்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் கிராம விவசாயிகளுக்கு, முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் குறித்த தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் கோவிந்தசாமி தலைமை தாங்கி விவசாயிகளுக்கு மானாவாரி நில மேம்பாடு மற்றும் மானாவாரிக்கு ஏற்ற பயிா் ரகங்கள், மழைநீா்ச் சேகரிப்பு கட்டமைப்புகள், மண் வளம், சமூகக் காடுகள் அமைத்தல் உள்ளிட்ட காரணிகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளித்தாா்.
பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலா் (ஓய்வு) மாதேஸ்வரன் கலந்து கொண்டு கோடை காலத்தில் கிடைக்கும் மழை நீரைப் பயன்படுத்தி உழவு செய்வது குறித்து பயிற்சி அளித்தாா்.
உதவி வேளாண்மை அலுவலா் ரகுபதி, அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ் ஆகியோா் பயிற்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகள் பெறும் பயன்கள், தமிழக முதல்வரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம், நடப்புப் பருவ பயிா்களுக்கான மானியத் திட்டங்கள் குறித்தும் விளக்கமளித்தனா்.