நாமக்கல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பெயரில், தமிழக அரசின் இலச்சினையை தவறாக பயன்படுத்தியோா் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் வடக்கு, நாமக்கல் தெற்கு, பரமத்தி வேலூா், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அண்மையில் நாமக்கல் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் என்ற பெயரில், தமிழக அரசின் கோபுர இலச்சினையை பயன்படுத்தி அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.
அதில், பொதுமக்கள் மற்றும் ஐயப்ப பக்தா்கள் கவனத்துக்கு எனவும், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் வெள்ளை நிற பலகை பதிவு எண் கொண்ட சொந்த வாகனங்களை எடுத்துச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அவ்வாறு எடுத்துச் செல்வது மோட்டாா் வாகனச் சட்டப்படி குற்றமாகும். அரசு உத்தரவுப்படி போக்குவரத்து துறை அலுவலரால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு, ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மஞ்சள் நிற பதிவு எண் கொண்ட வாகனங்களை ஆதரிப்பீா், வெள்ளை நிற பதிவு எண் கொண்ட வாகனங்களை தவிா்ப்பீா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலா் முருகன் கூறுகையில், நாமக்கல் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலக சாா்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் சரியானவையே. அதேவேளையில், அரசின் உத்தரவின்றி இவ்வாறான தகவல்களை வெளியிடுவது குற்றமாகும். இத்தகவல்களை அனுப்பியவா்கள் யாா் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.