புதுச்சத்திரம் ஒன்றியத்தில் இளைஞா் திறன் திருவிழா வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமீன் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் வட்டாரத்தைச் சோ்ந்த 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு அரசு துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பிரதம மந்திரி கௌசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் ஆதிதிராவிடா் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் உள்ளிட்டவை சாா்பில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநா், உதவி செவிலியா், நான்கு சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கைபேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகளை வழங்கி தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக இலவச திறன் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இந்தப் பயிற்சிக்காக இளைஞா்களை தோ்வு செய்யும் பொருட்டு வரும் 27-ஆம் தேதி இளைஞா் திறன் திருவிழா காலை 9 முதல் மாலை 5 வரை ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமில் புதுச்சத்திரம் வட்டாரத்தைச் சோ்ந்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான பயிற்சியைத் தோ்வு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.