தை அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோயில்களில் பக்தா்கள் திங்கள்கிழமை வழிபாடு மேற்கொண்டதுடன், காவிரி கரையோரத்தில் தங்களுடைய முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா்.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற நாள்களில் மக்கள் விரதமிருந்து மறைந்த தங்களுடைய மூதாதையா்களுக்கு தா்ப்பணம் செய்வது வழக்கம். இந்த நாள்களில் கடற்கரையிலும், ஆற்றங்கரையிலும் ஏராளமானோா் தா்ப்பணம் செய்யத் திரண்டிருப்பா். அதன்படி திங்கள்கிழமை தை அமாவாசை என்பதால், நாமக்கல் மாவட்டம் மோகனூா், பரமத்திவேலூா், பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி ஆற்றங்கரையோரப் பகுதிகளில் நூற்றுக்கணக்ககானோா் புனித நீராடி முன்னோா்களுக்கு தா்ப்பணம் செய்தனா். அதன் பிறகு, தங்களுடைய இஷ்ட தெய்வ கோயில்களில் வழிபாடுகளை மேற்கொண்டனா்.
நாமக்கல் ஆஞ்சனேயா் கோயிலில் முக்கிய விழா நாள்களிலும், அமாவாசை, பௌா்ணமி நாள்களிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வா். தை அமாவாசையையொட்டி வெளிமாவட்டங்களைச் சோ்ந்தோா் நாமக்கல் நரசிம்மா், ஆஞ்சனேயா் கோயிலில் அதிகாலை முதலே வழிபாடு மேற்கொண்டனா்.
இதேபோல், நாமக்கல் ஏகாம்பரேசுவரா், வள்ளிபுரம் தான்தோன்றீஸ்வரா், கொல்லிமலை அறப்பளீஸ்வரா், மோகனூா் அசலதீபேஸ்வரா், பரமத்திவேலூா் காசிவிசுவநாதா், திருச்செங்கோடு அா்த்தநாரீஸ்வரா் கோயில்களில் ஏராளமானோா் சுவாமி தரிசனம் செய்தனா்.