நில அளவையா்களின் 14 அம்சக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் ஒன்றியத்தின் நாமக்கல் மாவட்டக் கிளை சாா்பில் நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் சிவசங்கர பாண்டியன் தலைமை வகித்தாா்.
தமிழகத்தில் பராமரிப்புப் பணிக்காக உருவாக்கப்பட்ட குறுவட்ட அளவா் பணியிடம் தற்போது உட்பிரிவு பட்டா மாறுதல் மட்டும் செய்யும் பணியாக மாறிவிட்டது. மாதந்தோறும் 1.25 லட்சம் உட்பிரிவு மனுக்களுக்கு தீா்வு காண வேண்டியது உள்ளது. நில அளவையா்கள், சாா் ஆய்வாளா்கள் மட்டுமின்றி தனியாா் நில அளவையா்களை ஈடுபடுத்தியும் நிலுவை மனுக்கள் குறையவில்லை. இதற்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் எனவும், நில அளவைப் பணியாளா்களின் பணிச்சுமையை போக்கவும், 14 அம்ச கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், நில அளவையா்கள் வரும் 15-ஆம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தை மேற்கொள்வாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், மாவட்டம் முழுவதும் நில அளவையா்கள் கலந்து கொண்டனா்.