நாமக்கல்லில் கோரிக்கைகளை வலியுறுத்தி, சாலைப் பணியாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை பராமரிப்பு ஊழியா் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ஜெ.செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மாநில தணிக்கையாளா் கே.மணிவண்ணன், மாநிலத் துணைத் தலைவா் ஏ. பாலசுப்பிரமணி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
சாலைப் பணியாளா்களை, திறன்மிகு இல்லா பணியாளா்கள் என பெயா் மாற்றம் செய்து அதற்குரிய ஊதிய உயா்வை வழங்க வேண்டும். சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்க காலத்தை, உரிய பணிக்காலமாக அறிவித்து அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும். சாலைகள் பராமரிப்பை தனியாா் வசம் ஒப்படைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.