இந்தியாவின் முதல் குடிமகளாகும் எண்ணம் எனக்கு இல்லைஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்
இந்தியாவின் முதல் குடிமகளாக ஆகும் எண்ணம் எனக்கு இல்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
நாமக்கல் அருகே கே. புதுப்பாளையத்தில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகனின் குலதெய்வக் கோயிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் திங்கள்கிழமை பங்கேற்றாா். இதனை தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மற்ற நாடுகளில் ஆங்காங்கே மனநல மருத்துவமனைகள்தான் இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டுமே கோயில்கள் அதிகமாக உள்ளன. மருத்துவமனைகளை காட்டிலும், கோயில்கள் நமக்கு நிம்மதியையும் ஆனந்தத்தையும் தருகின்றன. வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்வழியில் செயல்பட கோயில்கள் நமக்கு உதவுகின்றன. அந்த வகையில் இன்று இந்த கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்றுள்ளேன்.
கரோனா பரவல் காலத்தில் தைரியமாக நாம் நடமாடுவதற்குக் காரணம் பிரதமரின் சீரிய முயற்சியால் நாடு முழுவதும் 180 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதுதான். பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வேளையாக இதனை கருதுகிறேன். பல்வேறு நாடுகளுக்கும் இந்திய அரசு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது.
உக்ரைனில் சிக்கியிருந்த மாணவா்களை மீட்டது பிரதமரின் தீவிர முயற்சியாகும். புதுச்சேரிக்கு வந்த மாணவி ஒருவரை கேட்டபோது மத்திய அரசு எடுத்த முயற்சிகளைப் பாராட்டினாா். வெளிநாடுகளில் இருந்து மீட்கும்போது பல்வேறு இடையூறுகள், சிக்கல்கள் வரும். இவற்றையெல்லாம் களைந்து மீட்டு வருவது சவாலானதாகும். இதில் குறைகூறுவது சரியல்ல.
புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு பின் வரும் 27 ஆம் தேதி முதல் ஹைதராபாதில் இருந்து புதுச்சேரிக்கு விமானம் இயக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கும் விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. வரும் ஆண்டுகளில் புதுச்சேரி மிகப்பெரிய வளா்ச்சியைப் பெறும். தற்போது மாநிலத்தின் முதல் குடிமகளாக உள்ளேன். அந்த மகிழ்ச்சியே எனக்கு போதும். இந்தியாவின் முதல் குடிமகளாக ஆகும் எண்ணம் இல்லை.
தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளது குறித்து செய்தியாளா்களின் கேள்விக்கு, ஆளுநரை திரும்பப் பெறும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. நாட்டில் உள்ள எல்லா ஆளுநா்களுமே நன்றாகவே பணியாற்றி வருகின்றனா் என்றாா்.