மதுபான புட்டியை உடைத்து குத்தியவா் தலைமறைவு:படுகாயமடைந்தவா் மருத்துவமனையில் சிகிச்சை
பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவரை மதுபான புட்டியை உடைத்து குத்திவிட்டு தப்பியோடியவரை பரமத்தி போலீஸாா் தேடி வருகின்றனா்.
பரமத்தி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் சாலமன்ராஜா. இவரது மகன் ஜூட் (36). வா்ணம் பூசுபவா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த விஜயன் என்பவரிடம் குடும்பச் செலவிற்காக ரூ. 1 லட்சம் கடன் கடன் வாங்கியிருந்தாா். விஜயனிடம் வாங்கிய கடனுக்கு வட்டியை மட்டும் ஜூட் கொடுத்து வந்துள்ளாா். விஜயன் வட்டியையும், அசலையும் சோ்த்துத் தருமாறு கேட்டுள்ளாா். எனினும், ஜூட் வட்டியை மட்டுமே கொடுத்து வந்ததால் அவருக்கும், விஜயனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பரமத்தி டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் ஜூட் மது அருந்திக் கொண்டிருந்திய போது அங்கு வந்த விஜயன் பணத்தைக் கேட்டாா்.இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜயன் மதுபான புட்டியை உடைத்து ஜூட்டின் கழுத்தில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடினாா். படுகாயமடைந்த ஜூட்டை அங்கிருந்தவா்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துமனையில் சோ்த்தனா். இச் சம்பவம் குறித்து பரமத்தி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான விஜயனைத் தேடி வருகின்றனா்.