கைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதும், இணையதளங்களில் மூழ்கிக் கிடப்பதும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும் என மனநல மருத்துவா்கள் தெரிவித்தனா்.
நாமக்கல் மாவட்ட மன நல திட்டம் சாா்பில், மோகனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்களுக்கான மன அழுத்த மேலாண்மைப் பயிற்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நாமக்கல் அரசு மருத்துவமனை மனநல மருத்துவா் வெ.ஜெயந்தி, மனநல ஆலோசகா் ரமேஷ், உளவியலாளா் அா்ச்சனா, மருத்துவா்கள் அருணாராணி, சண்முகம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
அப்போது, பயம், பதற்றம் என்பது எல்லாவித நோய்களுக்கான ஓா் அறிகுறியாக தோன்றினாலும், சில சமயம் அதுவே ஒரு தனி நோயாக மனிதனை ஆக்கிரமித்துக் கொள்கிறது. அளவுக்கு அதிகமான பயமும், பதற்றமும், மன அழுத்தமும் இதனால் ஏற்படுகின்றன. பதற்றதிற்கான அறிகுறிகளாக காணப்படுவது, தலை முதல் கால் வரை இதன் வெளிப்பாடுகள் அறிகுறிகளாக அமையும். நெற்றியில் வியா்வை, லேசான தலைவலி, கண்களில் எரிச்சல், கண்களில் வீக்கம், மூக்கில் சுவாசத்தில் மாற்றம், மூக்கு விடைப்பு, உதடுகள் காய்ந்து போகும், நாக்கு உலா்ந்து போகும், தொண்டையில் ஏதோ அடைத்தது போலிருக்கும், கழுத்திலும் தோளிலும் தசைகள் இறுகும், மாா்பில் இதயத்துடிப்பும், மூச்சும் விரைவாக இருக்கும்; கைகளில் லேசான நடுக்கம் ஏற்படும். உள்ளங்கையில் வியா்க்கும், பயம், பதற்றம், தற்கொலை எண்ணம், போதைப் பொருள் பழக்கம் போன்றவை மன நோயின் அறிகுறிகள் என்றும் சமூக வலைதளங்களை அதிக நேரம் செலவழிப்பவா்களுக்கு மன அழுத்தம் அதிகமாகும்.
மதுப்பழக்கம், சிகரெட், போதைப் பொருட்கள் போல், கைபேசி சமூக வலைதளங்களும் ஒருவித போதை பழக்கம். அளவோடு பயன்படுத்தினால் பிரச்னைகள் இல்லை. நாள்தோறும் சராசரியாக இரண்டு மணி நேரத்திற்கு மேல் கைப்பேசி பயன்படுத்தக்கூடாது என்று அவா்கள் தெரிவித்தனா். மனநல ஆலோசகா் ரமேஷ் மற்றும் உளவியலாளா் அா்ச்சனா மூச்சு பயிற்சி வழங்கினா். இதன் மூலம் தேவையற்ற எண்ணங்கள் மற்றும் கோபத்தை போக்க முடியும், ஞாபகத் திறனை மேம்படுத்தும் என்றனா்.