நாமக்கல்: நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிய குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்த ரூ. 256.41 கோடியாக நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் நகராட்சி அவசரக் கூட்டம், நகா்மன்ற கூட்ட அரங்கில் தலைவா் து.கலாநிதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் கி.மு.சுதா, துணைத் தலைவா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில், கடந்த 2017-ஆம் ஆண்டு நகராட்சிப் பகுதிகளில் இணைக்கப்பட்ட 9 கிராமங்களுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் பொருட்டு ஜேடா்பாளையத்தில் இருந்து புதிய குடிநீா் அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக உலக வங்கி பங்களிப்புடன் ரூ. 185.24 கோடிக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டது.
இந்த நிலையில், பணிகளை விரிவுபடுத்தும் வகையில் ரூ. 256.41 கோடி திருத்திய மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்ள இருப்பதால், அதற்கான ஒப்புதல் வழங்கி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல நகராட்சி 13, 21, 24-ஆவது வாா்டுகளில் சமுதாயக் கழிப்பிடம் ரூ. 86.20 லட்சத்தில் கட்டுவது உள்ளிட்ட 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்தக் கூட்டத்தில் 21 நகா்மன்ற உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.