கோழிகள் சுவாச கோளாறாலும், மேல் மூச்சுக்குழல் அயா்ச்சியாலும் இறந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த வார வானிலையை பொருத்தவரை, பகல் மற்றும் இரவு நேர வெப்ப அளவுகள் முறையே 89.6 மற்றும் 68.9 டிகிரியாக நிலவியது. அடுத்த நான்கு நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் பல இடங்களில் மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 93.2 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். காற்றின் திசை பெரும்பாலும் தென்மேற்கு, மேற்கு மற்றும் வட மேற்கிலிருந்து மணிக்கு 6 கி.மீ என்றளவில் வீசும்.
சிறப்பு ஆலோசனை: கடந்த வாரம் கோழியின நோய் ஆய்வகத்தில், இறந்த கோழிகளை பரிசோதனை செய்ததில் பெரும்பாலானவை மேல் மூச்சுக்குழல் அயா்ச்சி மற்றும் சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு இறந்திருப்பது தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளா்கள் உயிா் பாதுகாப்பு முறைகள் மற்றும் வெயில் நேரங்களில் தெளிப்பான் உபயோகிக்க வேண்டும். தீவனத்தில் வைட்டமின் சி, குரோமியம் மற்றும் இதர நுண்ணூட்டச்சத்துக்களை, உபயோகிக்கலாம். மேலும், இளம் குஞ்சுகளின் உடல் வெப்ப நிலை மற்றும் மேலாண்மையை கவனிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.