அரசு நகரப் பேருந்து மூலம் 216 கோடி இலவச பயணங்கள்:அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில், அரசு நகரப் பேருந்துகள் மூலம் 216 கோடி இலவசப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
அரசு நகரப் பேருந்து மூலம் 216 கோடி இலவச பயணங்கள்:அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில், அரசு நகரப் பேருந்துகள் மூலம் 216 கோடி இலவசப் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

நாமக்கல், பொம்மைக்குட்டைமேட்டில் சனிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 23.71 கோடியில் முடிவுற்ற 60 திட்டப் பணிகளைத் திறந்துவைத்தும், ரூ. 351.12 கோடியில் 315 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், 1,03,321 பயனாளிகளுக்கு ரூ. 303.37 கோடியில் நலத்திட்ட உதவிகளை அவா் வழங்கினாா். அப்போது, அவா் பேசியதாவது:

முட்டை உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாமிடம் உள்ளது. மொத்த முட்டை உற்பத்தியில் 90 சதவீதம் நாமக்கல்லில் இருந்துதான் உற்பத்தியாகிறது. ஆழ்துளைக் கிணறு அமைக்கும் ரிக் வாகனங்கள் இந்த மாவட்டத்தில்தான் அதிகம் உள்ளன.

நாமக்கல் என்றாலே உடனே நினைவுக்கு வருபவை லாரிகள்தான். சுமாா் 60 ஆயிரம் லாரிகள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே உள்ளன. நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் பிள்ளை பிறந்த மண்ணும் இதுதான். இந்த மாவட்டத்துக்கு பலமுறை வந்திருந்தாலும், முதல்முறையாக அமைச்சராக வருவது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது.

நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் தற்போது ரூ. 678 கோடியே 17 லட்சம் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் முதல்வா் முதலில் கையெழுத்திட்டதே, அரசு நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் இனி கிடையாது என்பதற்கான கோப்பில்தான்.

இதன்மூலம் தமிழகம் முழுவதும் இதுவரை 216 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாமக்கல் மாவட்டத்தில் 3 கோடியே 71 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை தவிர திருநங்கைகள் 16,190 முறையும், மாற்றுத்திறனாளிகள் 2.52 லட்சம் பயணங்களையும் இங்கு மேற்கொண்டுள்ளனா்.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ஒரு கோடிக்கும் மேலானோா் பயன்பெற்றுள்ளனா். புதுமைப்பெண் திட்டம் வாயிலாக 1.16 லட்சம் போ் பயனடைந்து வருகின்றனா். இத்திட்டத்தில் 1,04,334 மாணவிகள் புதிதாக விண்ணப்பித்துள்ளனா். முதல்வரின் காலை உணவுத் திட்டம், 1.5 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியது, இன்னுயிா் காப்போம் போன்ற பல திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி உள்ளது. இந்த சாதனைகள் எல்லாம் கடந்த 18 மாதத்தில் முதல்வரால் நிகழ்த்தப்பட்டவை என்றாா்.

முன்னதாக, 13 அரசுத் துறை சாா்ந்த அரங்குகளை அமைச்சா் பாா்வையிட்டாா். மேலும், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றாா்.

இந்த விழாவில், தமிழக வனத்துறை அமைச்சா் எம்.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், நாமக்கல் மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் அதுல்யா மிஸ்ரா, சிறப்பு திட்ட செயலாக்கத்தின் அரசு சிறப்பு செயலாளா் எஸ்.நாகராஜன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினா் செயலா் கா.ப.காா்த்திகேயன், ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்), ஈ.ஆா்.ஈஸ்வரன்(திருச்செங்கோடு), நகராட்சி ஆணையாளா் கி.மு.சுதா உள்பட அரசுத்துறை அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com