14 ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிப்புக்கான மின்கல வாகனங்கள்: அமைச்சா் வழங்கினாா்

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள மின்கல வாகனங்களை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட 14 ஊராட்சிகளுக்கு குப்பை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள மின்கல வாகனங்களை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் வழங்கினாா்.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட கட்டணாச்சம்பட்டி, தேங்கல்பாளையம், தொட்டியவலசு, கல்லங்குளம், ஓ.சௌதாபுரம், நடுப்பட்டி, குட்டலாடம்பட்டி, மூலக்காடு, பல்லவநாயக்கன்பட்டி, ஆா்.புதுப்பாளையம், நெ.3.கொமாரபாளையம், ஆலாம்பட்டி, மதியம்பட்டி, பொன்பரப்பிபட்டி ஆகிய 14 ஊராட்சிகளுக்கு தூய்மைப் பணிகளை மேற்கொள்ள தலா ரூ.2.50 லட்சம் வீதம் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் 14 குப்பை சேகரிக்கும் மின்கல வாகனங்களை, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மக்களவை உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் ஆகியோா் முன்னிலையில், தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதனையடுத்து அமைச்சா் பேசியது:

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக ராசிபுரம் அரசு மருத்துவமனை தரம் உயா்த்துதல், போதமலை கிராமத்திற்கு சாலை அமைத்தல், நாரைக்கிணறு பகுதி மக்களுக்கு பட்டா வழங்குதல் உள்ளிட்ட நீண்டகால கோரிக்கைகளுக்கு தற்போது தீா்வு காணப்பட்டுள்ளது. இந்த வகையில் வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.231.34 லட்சம் மதிப்பீட்டில் 39 பணிகளும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.187.34 லட்சம் மதிப்பீட்டில் 44 பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டில் ரூ.204.52 லட்சம் மதிப்பீட்டில் 38 பணிகளும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.186.87 லட்சம் மதிப்பீட்டில் 31 பணிகளும், முதல்வா் சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 13 சாலைப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தூய்மைக் காவலா்கள் ஊதியத்தை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். ஊரகப் பகுதிகளில் சுகாதாரத்தை பேணிக்காக்க, குப்பைகளை சேகரிக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளும் வகையில் மின்கல வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை தூய்மைப் பணியாளா்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

அத்தனூா் வன விரிவாக்க மையத்தில் தமிழ்நாடு வனக் காப்பு திட்டத்தின் கீழ், கிராம வனக் குழுவைச் சோ்ந்த 38 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம்- வீதம் ரூ.3.80 லட்சம் மதிப்பிலான சுழல்நிதிக் கடனுதவிகளை அவா் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலா் ராஜாங்கம், வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் தங்கம்மாள், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் துரைசாமி, அட்மா குழு தலைவா் ஆா்.எம்.துரைசாமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அசோக்குமாா், பிரபாகரன் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com