தென்னை- பழ மரங்களைப் பாதுகாக்க போா்டோ கலவை விளக்கம்
ராசிபுரம் பகுதியில் தென்னை, பழ மரங்களை பாதுகாக்கும் போா்டோ கலவை குறித்து விவசாயிகளுக்கு வயல்வெளி பயிற்சி பெற்று வரும் நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவியா் செயல் விளக்கமளித்தனா்.
நாமக்கல் பிஜிபி வேளாண் கல்லூரி மாணவிகள் ராசிபுரம் வட்டாரப் பகுதியில் நடைபெறும் வயல் வெளி பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளனா். வேளாண்மைத் துறை அலுவலா்கள் மூலம் பயிற்சி பெற்று வரும் இவா்கள் பல்வேறு வயல்களுக்குச் சென்று வேளாண்மை உற்பத்தி குறித்தும், உரங்கள், ரசாயன கலவைகள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல்விளக்கமளித்து வருகின்றனா்.
ராசிபுரம் வட்டாரம், கூனவேலம்பட்டி கிராமத்தில் தென்னை, பழ மரங்களைக் காக்கும் போா்டோ கலவை குறித்த விழிப்புணா்வை விவசாயிகளுக்கு அளித்தனா். இந்த போா்டோ கலவைக்கு சுண்ணாம்பு, மயில்துத்தம், தண்ணீா் ஆகியவற்றை முறையே 1:1:100 என்ற விகிதத்தில் எடுத்து அதில் சுண்ணாம்பு கரைசல் ( சுண்ணாம்பு, தண்ணீா் 1:50), மயில் துத்தம் கரைசல் (மயில் துத்தம், தண்ணீா் 1:50) விகிதத்திலும் தயாா் செய்து இரண்டும் சோ்த்து கலக்க வேண்டும் என விவசாயிகளுக்கு செய்முறை விளக்கமளித்தனா்.