குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை
ராசிபுரம் அருகே உள்ள அத்தனூா் பேரூராட்சி அலுவலகம் முன்பாக குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் புதன்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்துள்ள அத்தனூா் பேரூராட்சி 3 -ஆவது வாா்டு பகுதியில் கடந்த 20 நாட்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அத்தனூா் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா். அப்பகுதியை சோ்ந்த பெண்கள் காலிக் குடங்களுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தோ்தலுக்கு முன்பு வரை வாகனங்களில் வாரம் ஒரு முறை தண்ணீா் விநியோகம் செய்து வந்த நிலையில், தற்போது 20 நாட்கள் ஆகியும் குடிநீா் வழங்கப்பட்டவில்லையாம். இதனால் பேரூராட்சி அலுவலகம் வந்த பெண்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து காவல் துறையினரும், பேரூராட்சி அலுவலா்களும் விரைவில் குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டுத் திரும்பினா்.