சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்: ஜி.கே.மணி வலியுறுத்தல்

மேட்டூர் அணையின் காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.

Updated On :23 ஜூலை 2018, 9:35 am IST

மேட்டூர் அணையின் காவிரி உபரிநீர் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என பா.ம.க. மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
ஓமலூரில் பா.ம.க. ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில்  மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டார். பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பாமக தொடங்கி 30 ஆண்டுகள் ஆகின்றன. இதைக் கொண்டாடும் வகையில்  வரும் 27 -ஆம் தேதி ஓமலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 
கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கொள்கை விளக்கக் குறிப்பில் 2017 - 18-ஆம் ஆண்டில் மட்டும் 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டு,  5 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக  அரசே தெரிவித்துள்ளது.  இதன் மூலம் நேரடியாக 5 லட்சம் பேர்,  மறைமுகமாக 5 லட்சம் பேர் என மொத்தம் 10 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் தொழில் வளர்ச்சி இல்லாத மாநிலமாக மாறியுள்ளது.  மேலும், புதிதாக தொழிற்சாலைகள் தொடங்கப்படவில்லை.  இருக்கும் தொழிற்சாலைகளையும் மூடி வருகின்றனர். இதை மாற்ற வேண்டும் என்றால் பா.ம.க.வுக்கு  மக்கள் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
ஏற்கெனவே கல்வியை மேம்படுத்த பல்லைக்கழக மானியக் குழு உள்ளது. தற்போது மத்திய அரசு, இதை மாற்றி மத்தியக் கல்வி ஆணையத்தை அமைப்பதாகக் கூறுகிறது. இதனால் மாநில உரிமைகள் பறிபோகும் சூழல் உள்ளது. 
மேட்டூர் அணை சில நாள்களில் முழுக் கொள்ளளவு 120 அடியை எட்டிவிடும்.  அதற்கு பிறகு வரும் தண்ணீர் கடலில் கலக்கும். காவிரி நீர் ஒரு சொட்டுக் கூட கடலில் கலக்கக் கூடாது.  சேலம் மாவட்ட ஏரி, குளங்களை நிரப்பும் வகையில் காவிரி உபரிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்.  இதற்காக பா.ம.க பல போராட்டங்களை நடத்தியதுடன், கடந்த காலங்களில் சட்டப்பேரவையில் பேசி திட்டங்கள் தயாரிக்கப்பட்டன.  இந்தத் திட்டத்தால் சேலம் மாவட்ட ஏரிகள் மட்டுமல்லாது,  சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதிகளில் தண்ணீர் விட வேண்டும்.  இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். மேலும், காவிரி ஆற்றில் 5 கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.