ரூ.4 ஆயிரம் லஞ்சம்: சேலத்தில் உள்ளூர் திட்ட குழும மேற்பார்வையாளர் உள்பட இருவர் கைது

சேலத்தில் வீட்டுமனையை அங்கீகாரம் செய்து தருவதற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உள்ளூர் திட்டக் குழுமத்தின் மேற்பார்வையாளர்

சேலத்தில் வீட்டுமனையை அங்கீகாரம் செய்து தருவதற்காக ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக உள்ளூர் திட்டக் குழுமத்தின் மேற்பார்வையாளர் உள்பட இருவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சேலம் குகை களரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம். இவர் தனக்குச் சொந்தமான 1,800 சதுர அடி அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைக்கு அங்கீகாரம் பெறுவதற்காக சூரமங்கலம் நகர ஊரமைப்பு இணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள உள்ளூர் திட்ட குழுமம் பிரிவில் விண்ணப்பம் செய்தார்.
இதையடுத்து,  உள்ளூர் திட்டக் குழும மேற்பார்வையாளர் கே.சின்னதுரை, வீட்டுமனையை அங்கீகாரம் செய்து தருவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, லஞ்சப் பணத்தை குறைத்து தர ஜீவானந்தம் கேட்டுக் கொண்டார்.  அப்போது மேற்பார்வையாளர் கே.சின்னதுரை, தரகர் சதீஷிடம் ரூ.4 ஆயிரத்தை தரும்படி கூறினாராம்.
இதையடுத்து, ஜீவானந்தம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார்.  லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் ஆலோசனையின் பேரில் ஜீவானந்தம் உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்று அங்கிருந்த தரகர் சதீஷிடம் ரூ.4 ஆயிரம் பணத்தை கொடுத்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட சதீஷ்குமார், மேற்பார்வையாளர் சின்னதுரையிடம் கொடுத்தார்.
அப்போது கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார்,  தரகர் சதீஷ் மற்றும் சின்னதுரையைக் கைது செய்தனர். பின்னர், லஞ்சமாகப் பெற்றுக் கொண்ட ரூ.4 ஆயிரம் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com