சேலம் அம்மாபேட்டையில் பழைய தார் சாலையை அகற்றிவிட்டு, புதிய தார்சாலை அமைக்க வலியுறுத்தி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சேலம் மாநகராட்சியில் புதை சாக்கடைத் திட்ட பணி முடிவடைந்த பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், அம்மாபேட்டை 39-வது வார்டுக்கு உட்பட்ட பெரிய கிணறு பகுதியில் புதை சாக்கடை பணி முடிந்து சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
புதை சாக்கடை அமைக்கும் பணி நிறைவடைந்து தற்போது புதிய தார் சாலை போடுவதற்கு அனுமதி கொடுத்துள்ளனர். ஆனால், ஏற்கெனவே உள்ள பழைய தார் சாலையின் மேலேயே புதிய தார் சாலை போடப்படுகிறது. இதனால் சாலை போட்டு சிறிது நாள்களில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறி விடுகின்றன. மேலும் மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும் சூழல் ஏற்படுகிறது. எனவே, பழைய தார் சாலைகளை முற்றிலும் பெயர்த்து எடுத்த பிறகு, புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என்றனர். உதவி ஆணையர் ஜெயராஜிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.