ஆத்தூர் அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக முதல்வர் முனைவர் சூ. அருள் அந்தோணி அறிவித்தார். இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசு கலைக் கல்லூரியில் 2019-20-ம் ஆண்டின் இளநிலை பட்ட வகுப்புகளுக்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவர்கள் நலன் கருதி இறுதி நாளை மே 10-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு வேலை நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 10 மாலை 5 மணி வரை பெறப்படும். முதலாம் ஆண்டு இளநிலை வகுப்புகள் மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்ட கலந்தாய்வு மே 20 அன்று இளங்கலை தமிழ், ஆங்கிலம், பாடப் பிரிவுகளுக்கும் மற்றும் மே 21 அன்று இளநிலையில் வேதியியல்,இயற்பியல்,தாவரவியல்,கணிதம் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், மே 22 அன்று இளநிலையில் வரலாறு, வணிகவியல், வணிக நிர்வாகவியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும் எனக் கல்லூரி முதல்வர் அறிவித்தார்.