சேலத்தில் மர்மமான முறையில் இளைஞர் தூக்கில் தொங்கி உயிரிழந்தார்.
சேலம் பள்ளப்பட்டி ராவனேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு விஜய் (25), கோபி (22) என இரண்டு மகன்கள் உள்ளனர். ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து ஜெயா தனது மகன் விஜயுடன் ஆட்டையாம்பட்டிக்குச் சென்று விட்டார்.
கோபி பள்ளப்பட்டியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவர் மூட்டை தூக்கும் கூலித்தொழில் செய்து வந்தார். வியாழக்கிழமை காலை கோபியின் வீடு திறந்து கிடந்த நிலையில் கோபி உயிரிழந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
தகவல் அறிந்த பள்ளப்பட்டி போலீஸார் நிகழ்விடம் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில், கோபியின் இடது தொடை பகுதியில் காயம் இருந்தது தெரியவந்தது. குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோபி ஒரு பெண்ணை காதலித்து வந்ததும் தெரியவந்தது. அதன் காரணமாக கோபி கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, போலீஸார் கோபியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.